Thursday, June 14, 2007

RAW-விலிருந்து இன்னொரு 'தேசபக்தர்' மாயம்!

புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில், "ரா' உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வங்கதேச உளவாளி, 'தலைமறைவானவர்' என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், பல்வேறு உளவு மற்றும் புலனாய்வுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில், முக்கியமானது, "ரா' என்று அழைக்கப்படும், "ரிசர்ச் அண்ட் அனலிசஸ் விங்க்!' இதில், துணை இயக்குனராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். அவர் பற்றிய சந்தேகத்துக்கு இடமான தகவல்கள் வரவே, அவரைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2005ம் ஆண்டு மே மாதம் தலைமறைவானார்.

கேபினட் செயலகத்தில் உள்ள, "ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்' இயக்குனர் அனுஜ் பரத்வாஜ், லோதி காலனி போலீஸ் நிலையத்தில், மாலிக் தொடர்பாக அப்போது புகார் பதிவு செய்தார். போலீசாரும் தேடி வந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில், "24 பர்கானா' மாவட்டத்தை சேர்ந்தவர் மாலிக் என்று, அவர் பற்றிய அரசு பதிவேட்டில் விவரம் இருந்தது. அங்கு போய், அவர் முகவரியில் விசாரித்த போது தான், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்' என்பதே போலீசுக்கு தெரிந்தது.

இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கு விஷயம் சென்றதை அடுத்து, திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. பிரதமர் அலுவலகத்தில், "டிசி' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி இருக்கிறார். அப்போது, அவர் பற்றி விசாரணை நடக்கிறது என்று தெரிந்ததும், திடீரென காணாமல் போய்விட்டார். இப்போது அவர், "தலைமறைவானவர்' என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், உளவு பிரிவுகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதல்ல. கடந்த 2004ம் ஆண்டில், "ரா' உளவுப்பிரிவின் இணைச் செயலர் ரவீந்தர் சிங் என்பவர், உளவு சொல்கிறார் என்று தெரிந்ததும், அமெரிக்காவுக்கு முக்கிய ஆவணங்களுடன் தப்பியோடி விட்டார். கடந்த 2002ம் ஆண்டில், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகையில் உளவு வேலை பார்த்ததாக 12 ஊழியர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த 1985ம் ஆண்டு, "கூமர் நாராயண் உளவு சதி வழக்கு' பரபரப்பானது. இவர்கள் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி: தினமலர்

விளங்காத விஷயங்கள்:

RAW போன்ற சென்சிடிவான அமைப்புகளில் ஒருவரை வேலைக்கு சேர்க்குமுன்னரே அந்த நபரின் பிண்ணனியை ஆராய்ந்திருக்க மாட்டார்களா என்ன? தேசவிரோத சக்திகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி 1999-ல் இவரை இந்தப் பணியில் சேர்த்திருக்க வாய்ப்பிருக்கிறதா? சமீப காலத்தில் RAW, ராணுவம் போன்ற அதிமுக்கியமான துறைகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப் படுவதும் 'காணாமல் போவதும்' அதிகரித்திருப்பதன் காரணம் என்ன?

தொடர்புடையை பழைய பதிவுகள்:

உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!
ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ராணுவ வீரர்
ராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல்
முக்கிய ஆவணங்களை திருடிய முன்னாள் ராணுவ அதிகாரி கைது!
அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள்

0 comments: