மதமாற்றத்தை விளையாட்டா எடுத்துக்கலாமா?
நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் கல்லடி விளையைச் சேர்ந்த இளைஞர் தங்கமெர்ஜின். இந்துவான இவர் சில மாதங்களுக்கு முன்பு முஸ்லீமாக தாய் மதத்திற்குத் திரும்பினார் (இப்படி சொல்றதுதான் இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டு!) .
மதம் மாறி சில மாதங்கள் ஆன நிலையில் இப்போது (மே 5) தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி இடலாக்குடியில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்து தங்கமெர்ஜின் தஞ்சம் புகுந்தார்.
இதற்கிடையே இந்து வாலிபர் ஒருவரை கட்டாய மதமாற்றம் செய்யப்போவதாக தவறான தகவல் பரப்பப் பட்டு இந்து அமைப்பினர் அந்த பகுதியில் திரண்டு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கினர்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் தங்கமெர்ஜினை போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
முஸ்லீம் மத கோட்பாடுகள் தனக்கு பிடித்து இருந்ததால் அந்த மதத்துக்கு மாறியதாக தங்கமெர்ஜின் தெளிவாக போலீசாரிடம் தெரிவித்தார்.
அதே சமயம் தங்கமெர்ஜினின் அண்ணனும், அவரது தாயாரும் அதை மறுத்து, தங்கமெர்ஜின் கட்டாயப் படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
'தங்கமெர்ஜின் ஒரு பெண் மீது ஆசைப்பட்டிருக்கிறான். 'அந்த பெண்ணை உனக்கே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால் நீ மதம் மாற வேண்டும்' என சிலர் அவனுக்கு ஆசை வார்த்தை கூறி உள்ளனர். பெண் மீது கொண்ட மோகத்தில் அவன் மதம் மாறி உள்ளான். தற்போது அவனை மதமாற்றிய நபர்கள் ஏமாற்றி விட்டனர். தங்கமெர்ஜின் மதம் மாறியதும் அவனது தந்தை மகாலிங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தங்கமெர்ஜினை மீண்டும் எங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.' என்று அவர்கள் கூறினர்.
தங்கமெர்ஜின் அவரது குடும்பத்தினர் சொல்வது போல ஒரு முஸ்லிம் பெண்ணின் மீது ஆசைப்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார் என்றால் அது தவறு. இஸ்லாமின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் வெறும் உணர்ச்சி வேகத்தில் மதம் மாறுவது, மத மாற்றம் அல்ல; அது வெறும் பெயர் மாற்றம்தான்!
ஆனால், இந்தச் செய்தியில் பல முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருக்கின்றன.
'கட்டாய மத மாற்றம்' என்று புரளியைக் கிளப்பியவர்கள், பிறகு 'திருமண ஆசை காட்டி' மதம் மாற்றினார்கள் என்கிறார்கள். அப்படி எந்தத் திருமணமும் நடந்ததாகவும் தெரியவில்லை. ஆசை காட்டியவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றால் தங்கமெர்ஜின் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருந்து கொண்டிருக்கிறார்?
கட்டாயப் படுத்தியோ ஆசை காட்டியோ மதம் மாற்றி ஆள் சேர்க்க வேண்டிய தேவை இஸ்லாமிற்கு என்றும் இருந்ததில்லை!
கட்டாயப் படுத்தியோ ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கு தங்கமெர்ஜின் விபரம் புரியாத சிறுவன் அல்ல. 22 வயதைக் கடந்த வாலிபர். நல்லது எது கெட்டது எது என்பதை உணர்ந்து கொள்ளும் பருவத்தை அடைந்தவர்.
அப்படி கட்டாயப் படுத்திதான் அவரை மதம் மாற்றினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், போலிசாரின் விசாரணையில் அவர் உண்மையை சொல்லியிருக்க முடியும். போலிசாரிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றவர்கள் முஸ்லிம்களே என்பதால் முஸ்லிம்கள் இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதும் புரிகிறது!
தங்கமெர்ஜினின் தந்தை கோமா நிலைக்குச் சென்றது வருத்தத்திற்குறிய ஒரு விஷயம்தான். ஆனால் அவரது மதமாற்றத்தால்தான் அவர் உடல் நலம் பாதிக்கப் பட்டார் என்பது ஒரு செண்டிமெண்டல் பிளாக் மெயில் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தங்கமெர்ஜின் முஸ்லிமாக இருந்தாலும் அவரது பெற்றோர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு மகன் என்ற முறையில் தனது பெற்றோருக்குரிய கடமைகளை அவரால் நிறைவேற்ற முடியும். இஸ்லாம் அதைத்தான் வலியுறுத்துகிறது.
மதமாற்றம் என்பது விளையாட்டு விஷயம் அல்ல. இது போன்ற ஒரு கடினமான முடிவை எடுத்து அதில் திடமாகவும் இருக்கும் தங்கமெர்ஜினுக்கு பாராட்டுக்கள்!
