சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஒரு முக்கிய ஆலோசனை!
அரசியல் பண்ண காரணமே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்துத்துவாக்கள் 'ராமர் பாலம்' என்ற ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்கள். நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் ஒரு நல்ல திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக பலி கொடுக்க முனைகிறார்கள் இவர்கள்.
'ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்கிறார் பெண் துறவி உமாபாரதி.
'ராமர் பாலத்தை அழித்து மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், அது இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும். இது நடக்க ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ராமர் பாலத்தை பாதுகாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்' என்கிறார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா.
ராமர் பாலத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் 2 நாள் மாநாட்டுக்கு இந்துத் துறவிகள் அமைப்பு மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், "புராதன சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு சட்டப்படி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்" என்று தொகாடியா சொன்னாராம். பாபர் மசூதி போன்ற, சரித்திரப் பிரசித்திப் பெற்ற புராதன சின்னங்களை இவர்கள் இடித்துத் தள்ளுவார்களாம். ராமர் பாலம் என்ற, இல்லாத ஒன்றை இவர்கள் காப்பாற்றப் போகிறார்களாம்..!!!!
சேது சமுத்திரம் போன்ற, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான திட்டங்களை இடையூறின்றி நிறைவேற்ற, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன்.
'சர்ச்சைக்குறிய அந்தப் 'பாலம்' ராமர் கட்டியதல்ல. அந்தக் கால அரபு முஸ்லிம்கள் தங்கள் வணிகப் பொருட்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்ல கட்டிய பாலம். அதனால் இதை இடிக்காமல், ஒரு புராதன சின்னமாக அறிவித்து மத்திய அரசே அதை பாதுகாக்கும்' என்று ஒரு 'பிட்'டை போட்டுப் பாருங்கள். இது மட்டும் 'க்ளிக்' ஆயிடுச்சுன்னா, 'அந்தப் பாலத்தை இடித்தே தீர வேண்டும்' என்று போராட்டம் நடத்தி, அதற்காக உயிரையும் கொடுக்க உமாபாரதி, ராமகோபாலன், தொகாடியா, சு.சாமி எல்லாம் வரிசையில் நிற்பார்கள்.
என்ன நாஞ்சொல்றது?
