ருஷ்டிக்கு ஆப்பு! வச்சது யாரு?
நல்ல இலக்கியங்களைப் படைத்து பேர் வாங்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வெவகாரமா எதையாவது எழுதி பேர் வாங்கும் எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சல்மான் ருஷ்டி இதில் இரண்டாம் ரகம். இரண்டாம் தரம் (Second rated) என்றும் சொல்லலாம். நானா சொல்லலீங்க.. டெய்லி மெய்ல் இணையத் தளத்துல அப்படித்தான் போட்டிருக்காங்க. நேரம் இருந்தா இந்தக் கட்டுரையை கொஞ்சம் படிச்சுப் பாருங்க. செம நக்கலா இருக்கும்.
25 வருசத்துக்கு முன்னாடி 'மிட்நைட் சில்ட்ரன்' அப்படின்னு ஒரு புத்தகம் எழுதினாராம் ருஷ்டி. அதுக்கு 'புக்கர் ப்ரைஸ்' எனப்படும் விருது கொடுத்தார்களாம். அதற்குப் பிறகு அவர் எழுதிய எல்லா புத்தகங்களுமே 'படிக்கவே முடியாத திராபைகள்' என்கிறது இந்த இணையத் தளம். இந்த அழகுல, அவரோட இன்னொரு புத்தகத்துக்கும் 'புக்கர் ப்ரைஸ்' கிடைக்கலேன்னு விழா நடந்த மண்டபத்து டாய்லெட்டுக்குள்ள போய் தேம்பித் தேம்பி அழுதாராம் பார்ட்டி! கோழைத்தனமான, திமிர் பிடித்த, அகம்பாவக்காரர் ருஷ்டி என்றும் இந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.
சரி, அந்த பழங்கதையெல்லாம் கிடக்கட்டும். நாம லேட்டஸ்ட் மேட்டருக்கு வருவோம்..
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருந்த ருஷ்டிக்கு விழா அமைப்பாளர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்களாம். மஹராஷ்டிராவிலிருந்து வந்த உளவுத்துறை தகவலின்படி மும்பை தாதா ஒருவர் ருஷ்டியை ஒழித்துக் கட்டுவதற்காக பணம் மற்றும் ஆயுதங்களைக் கொடுத்து இரண்டு அடியாட்களை ஜெய்ப்பூருக்கு அனுப்பியிருப்பதாகவும், அதனால் அவரை விழாவுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் சொல்லப்பட்டிருந்ததாம். அதே மின்னஞ்சலில் ராஜஸ்தான் உயர் மட்ட அரசு அதிகாரிகள் சிலருக்கும் காப்பி அனுப்பப்பட்டிருந்ததாம்.
ஈரான் கொமெய்னியின் பிரபல ஃபத்வாவிற்குப் பிறகு 'எங்கே இருக்கிறார்?' என்றே தெரியாமல் நாடு நாடாக ஒளிந்து திரிந்துக் கொண்டிருந்த ருஷ்டி இப்பத்தான் வெளியுலகத்திற்கு வந்து மாடல் அழகிகளுடன் சல்லாபம், திருமணம், விவாகரத்து என்று வாழ்க்கையை என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். 'மறுபடியும் முதல்லேருந்தா?' என்று அதிர்ந்து போனார் அவர்.
'அவிங்க யாருன்னாச்சும் சொல்லுங்கய்யா..' என்று ருஷ்டி கேட்டுக்கொண்டதால் மூன்று நபர்களின் பெயர்களை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். மும்பையில் உள்ள தமது நண்பர்கள் மூலம் இந்த நபர்களை பற்றி விசாரித்திருக்கிறார் ருஷ்டி.
அதில் ஒரு பெயர் சகிப் நச்சன். இவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துடன் தொடர்புடையவராம். எந்த சிமி? இந்தியாவுல எங்கேயாவது குண்டு வெடிச்சா வெடி சத்தம் அடங்குறதுக்குள்ள டிவியிலே எல்லாம் சொல்வாங்களே, 'குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம்'னு, அதே சிமிதான். மற்ற இரண்டு பெயர்களைப் பற்றி ருஷ்டியின் நண்பர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், இந்த மூன்று பெயர்களையும் படித்து விட்டு மும்பை போலிஸ்காரங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்களாம், அப்படி யாருமே இல்லேன்னு.! என்ன கொடுமை சார் இது?
அப்படின்னா, எந்த மும்பை தாதாவும் இவரை ஒழித்துக்கட்ட அடியாட்களை அனுப்பவில்லையா? அப்ப ஏன் மஹராஷ்டிரா உளவுத்துறை அப்படி ஒரு தகவலை அனுப்புனாங்க என்று கேட்டால், 'நாங்க அப்படி எதுவும் சொல்லவில்லையே!' என்று அவர்கள் மறுத்து விட்டார்களாம். அப்படின்னா மத்திய உளவுத்துறையா இருக்கும்னு டெல்லியில கேட்டா, 'எங்களுக்கும் ஒன்னும் தெரியாது'ன்னு கையை விரிச்சுட்டாங்களாம். அப்ப ராஜஸ்தான் போலீஸ்? அங்கேயும் அதே பதில்!
நேரில்தான் கலந்துக் கொள்ள முடியவில்லை.. வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாகவாவது விழாவில் பேசலாம் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு அதிலும் ஆப்பு வைத்து விட்டார்கள்.
கடுப்பாகிப்போன ருஷ்டி, 'இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் கட்சிதான். உ.பி.யில் நடக்க இருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர்கள்தான் இந்த சதித்திட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்' என்று ஒரு பேட்டியில் கூற, 'எங்களுக்கு இதுதான் வேலையா?' என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார் காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் மனு சிங்வி.
இப்ப பிரச்னை என்னன்னா, ருஷ்டிக்கு இந்த ஆப்பை வச்சது யாரு?
எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்கையா!
