Monday, October 23, 2006

ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ராணுவ வீரர்

ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற மேலும் ஒரு ராணுவ வீரர் கைது!

புதுடில்லி: ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நபரிடம் விற்க முயன்ற ராணுவ வீரர் ஒருவரை டில்லி போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களில் கைது செய்யப்படும் இரண்டாவது ராணுவ வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லியின் தெற்கு மேற்கு பகுதியில் உள்ள மகிபால்பூர் என்ற பகுதியில் வசிப்பவர் அனில் குமார். ஹவில்தாரான இவர் ராணுவ குழு காப்பீட்டு பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்திய ராணுவ ரகசியங்களை டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக டிரைவரிடம் இவர் அளிக்க முயன்றார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனில் குமாரை டில்லி போலீசார் கைது செய்தனர். அந்த டிரைவரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். அவரை சட்டவிரோதமாக கைது செய்து துன்புறுத்தியதாக பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து ஸ்ரீநகரில் இருந்து டில்லி வந்த விமானத்தில் பயணம் செய்த ரிதீஷ் குமார்(24) என்ற ராணுவ வீரரையும் டில்லி போலீசார் கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்தே அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் காஷ்மீரில் உள்ள லே பகுதியில் சிக்னல் மேனாக பணியாற்றுபவர். காத்மாண்டுவில் உள்ள சிலரிடம் இவர் இந்திய ராணுவ ரகசியங்களை விற்க முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ரிதீஷ் குமாரிடம் இருந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பமான பென் டிரைவ் மற்றும் சில முக்கிய ராணுவ ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் ரிதீஷ் குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து இருக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து டில்லி போலீஸ் துணை கமிஷனர் (சிறப்பு பிரிவு) அலோக் குமார் கூறுகையில்,""பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் ஒருவர் காத்மாண்டுவில் உள்ளார். அவரிடம் முக்கிய ஆவணங்களை அளிக்கும் முயற்சியில் ரிதீஷ் குமார் ஈடுபட்டுள்ளார் என்று தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதையடுத்தே அவரை நாங்கள் கைது செய்தோம். கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு ஆதரவாக ரிதீஷ் குமார் செயல்பட்டு வந்துள்ளார். இதற்கு முன்பு சில ஆவணங்களையும் அவர் அளித்துள்ளார். அவருக்கு இரண்டு முறை ஐ.எஸ்.ஐ., அமைப்பு பணம் அளித்துள்ளது. ரிதீஷ் குமார் ராணுவத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகளாகிறது. ராணுவத்தில் மேலும் சிலர் இது போல் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பணிபுரிகின்றனரா என்பதை அறிய, ரிதீஷ் குமாரிடம் விசாரணை நடத்த உள்ளோம்,'' என்றார்.


தினமலர்-23/10/06

2 comments:

said...

//இது குறித்து டில்லி போலீஸ் துணை கமிஷனர் (சிறப்பு பிரிவு) அலோக் குமார் கூறுகையில்,""பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.எஸ்., ஏஜென்ட் ஒருவர் காத்மாண்டுவில் உள்ளார். அவரிடம் முக்கிய ஆவணங்களை அளிக்கும் முயற்சியில் ரிதீஷ் குமார் ஈடுபட்டுள்ளார் என்று தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதையடுத்தே அவரை நாங்கள் கைது செய்தோம். கடந்த ஆண்டு டிசம்பர் முதல் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு ஆதரவாக ரிதீஷ் குமார் செயல்பட்டு வந்துள்ளார்.//

ஐ எஸ் ஐ தானே?

said...

//ஐ எஸ் ஐ தானே? //

நீங்க சொல்றது சரிதான். இப்ப திருத்திட்டேன். தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.