Tuesday, March 25, 2008

ஓவியர் ஹுசைன் இப்படிச் செய்திருக்கக் கூடாது!


ஓவியர் ஹுசைன் வரைந்த 'மகாபாரதம்: கங்கா ஜமுனா யுத்தம்' என்ற ஓவியம் நியூயார்க் நகரில் நடந்த ஏலம் ஒன்றில் சாதனை அளவாக 1.6 மில்லியன் டாலருக்கு விலை போயிருக்கிறது. 4 அல்லது 6 லட்சம் டாலருக்கு விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த ஓவியம், இந்துத்துவாக்கள் அளித்த இலவச விளம்பரத்தினால் இந்த சாதனையை எட்டிப் பிடித்திருக்கிறது.
க்ரிஸ்டீ நிறுவனம் இந்த ஓவியத்தை ஏலம் விடப்போகிறது என்று தெரிந்ததும், 'இந்திய அமெரிக்க அறிவுசீவிகள் சபை' (Intellectual என்றால் 'அறிவுசீவி' என்றுதானே அர்த்தம்? ) ஒரு கடிதம் எழுதி 'ஹுசைன் இந்துக் கடவுள்களை மரியாதைக் குறைவான முறைகளில் சித்தரித்து ஓவியம் வரைந்து இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பதால், அவரது ஓவியங்களை ஏலம் விடக்கூடாது' என்று கேட்டுக் கொண்டார்களாம். 'மீறி ஏலம் விட்டால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' என்று அவர்கள் சொல்லியும் க்ரிஸ்டீ நிறுவனம் அவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. இலவச விளம்பரம் கிடைக்கிறதென்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள்?
ஏலம் நடந்த அன்று வெளியே கூச்சலும் ஆர்ப்பாட்டமுமாக இருந்தபோது, உள்ளே அந்த ஓவியம் கனஜோராக, எதிர்பார்க்கப் பட்டதை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான தொகைக்கு விற்கப் பட்டது.
ஆனால், ஹூசைன் இப்படி செய்திருக்கக் கூடாதுதான்! இஸ்லாம், முஸ்லிம்கள் உருவப்படங்கள் வரைவதை தடை செய்திருக்கிறது. பிற மதக் கடவுள்களை ஏசுவதையும் பழிப்பதையும் தடை செய்திருக்கிறது. இஸ்லாமியப் பெயரை உடைய ஹுசைன் இந்த இரு கட்டுப்பாடுகளையும் மீறியே இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
இந்துத்துவாக்கள் வேண்டுமானால் இரட்டை வேடம் போடுபவர்களாக இருக்கலாம். 'எங்கள் கடவுள்களை மரியாதை குறைவாக வரைந்து விட்டார்' என்று ஒரு பக்கம் கூக்குரல் போட்டுக் கொண்டு, இன்னொரு பக்கம் பங்களாதேஷின் தஸ்லிமா நஸ்ரினுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கலாம். 'எங்கள் மத உணர்வுகள் புண் பட்டு விட்டன' என்று ஓலமிட்டுக் கொண்டே ஔரங்கசீப் பற்றி ஓவியக் கண்காட்சி நடத்தி முஸ்லிம்களின் மன உணர்வுகளை காயப் படுத்தலாம்.
எனவே, இந்துத்துவாக்கள் இப்படியாக தங்கள் 'இரட்டை நாக்கு'த் திறனை வெளிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு முஸ்லிம் என்ற வகையில் ஹுசைன் இப்படி செய்திருக்கக் கூடாது!