Tuesday, July 24, 2007

விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்!

தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை. இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு. மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அளிப்பதற்காக நடந்த நாட்டு பிரிவினைக்குப் பின், இந்தியாவுடனே இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களுக்கு கூட, மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும், இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பலருடைய தியாகம் மறைந்துவிட்டது என்றே கூறலாம். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போன்றோர் இன்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள். அவர் ஷம்லி என்ற இடத்தில் பிரிட்டிஷார்களை ஓடச் செய்தார். அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷாவலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோரும் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கி சிறப்புப் பெற்றவர்கள். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.



"ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற நூலில், விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் ஷா வலியுல்லாஹ் எழுதினார். இவரது மகன் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான "பத்வா'க்களை (தண்டனை பேராணை) பிரயோகித்தார். விடுதலைப் போர் துவங்கவும் "பத்வா' அறிவிக்கப்பட்டது.


சையத் அஹ்மத் ஷகீத் (1831) மார்க்க அறிஞரான இவர், உ.பி., ரேபரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் எல்லைப் புறத்தில் தற்காலிக சுதந்திர அரசை துவக்கினார். அது பல ஆண்டுகள் நீடித்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் முஜாகிதீன்கள் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் பலகோட் போர்க்களத்தில் பிரிட்டிஷாரை வீரமுடன் எதிர்த்து 300 இஸ்லாமியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். "சாதிப்பூர்உலமா' இந்த படைக்கு தலைமை தாங்கினார். 1845 முதல் 1871ம் ஆண்டு வரை இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார்.


மாவீரம் கொண்ட"மவ்லவிகள்' என்று கேட்டாலே பிரிட்டிஷார் நடுங்கினார்கள். 1857ம் ஆண்டில் முதல் சுதந்திரப் போரின் போது, 34 உலமா (இஸ்லாமிய மத சட்ட அறிஞர்) பிரிட்டிஷாருக்கு எதிராக பத்வா அறிவித்தார்கள். மவுலானா காசிம், மவுலானா ரஷீத் அகமது மற்றும் ஹபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்கள் போர்க்களத்திலேயே மடிந்தார்கள். முதல் சுதந்திரப் போர் சமயத்தில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்திருக்கின்றனர். தலைநகர் டில்லியில் மட்டுமே 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தார்கள். குறுநில அரசான "அவுத்'தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதைப்பார்த்த உருது கவிஞர் மிர்ஸா காலிப், "என் முன்னால்ரத்த ஆறு ஓடியதைப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை பார்த்தேன். மற்றொருபுறம் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதை பார்த்தேன்'' என்றுஎழுதினார்.


இஸ்லாமியர்கள் போரிட்டவரலாற்றை இன்று நினைத்தாலும் உடல் மெய்சிலிர்க்கும்.



சுதந்திர தின வைரவிழாவுக்கு இன்னும் 23 நாட்கள்...

.

இந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றிகள்!

சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஒரு முக்கிய ஆலோசனை!

அரசியல் பண்ண காரணமே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்துத்துவாக்கள் 'ராமர் பாலம்' என்ற ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்கள். நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் ஒரு நல்ல திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக பலி கொடுக்க முனைகிறார்கள் இவர்கள்.



'ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்கிறார் பெண் துறவி உமாபாரதி.

'ராமர் பாலத்தை அழித்து மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், அது இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும். இது நடக்க ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ராமர் பாலத்தை பாதுகாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்' என்கிறார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா.

ராமர் பாலத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் 2 நாள் மாநாட்டுக்கு இந்துத் துறவிகள் அமைப்பு மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், "புராதன சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு சட்டப்படி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்" என்று தொகாடியா சொன்னாராம். பாபர் மசூதி போன்ற, சரித்திரப் பிரசித்திப் பெற்ற புராதன சின்னங்களை இவர்கள் இடித்துத் தள்ளுவார்களாம். ராமர் பாலம் என்ற, இல்லாத ஒன்றை இவர்கள் காப்பாற்றப் போகிறார்களாம்..!!!!

சேது சமுத்திரம் போன்ற, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான திட்டங்களை இடையூறின்றி நிறைவேற்ற, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன்.

'சர்ச்சைக்குறிய அந்தப் 'பாலம்' ராமர் கட்டியதல்ல. அந்தக் கால அரபு முஸ்லிம்கள் தங்கள் வணிகப் பொருட்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்ல கட்டிய பாலம். அதனால் இதை இடிக்காமல், ஒரு புராதன சின்னமாக அறிவித்து மத்திய அரசே அதை பாதுகாக்கும்' என்று ஒரு 'பிட்'டை போட்டுப் பாருங்கள். இது மட்டும் 'க்ளிக்' ஆயிடுச்சுன்னா, 'அந்தப் பாலத்தை இடித்தே தீர வேண்டும்' என்று போராட்டம் நடத்தி, அதற்காக உயிரையும் கொடுக்க உமாபாரதி, ராமகோபாலன், தொகாடியா, சு.சாமி எல்லாம் வரிசையில் நிற்பார்கள்.

என்ன நாஞ்சொல்றது?

Monday, July 23, 2007

டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை - ஆஸ்திரேலியக் காவல்துறை


மெல்போர்ன்: டாக்டர் ஹனீஃபிற்கு எதிராக கடந்த 12 நாட்களாகத் தொடரும் மிகக் கடுமையான தேடுதல் வேட்டைகளுக்குப் பிறகு, "டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றும் ஏற்கெனவே அவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட தகவல் பொய்யானது என்றும் இனி ஹனீஃபை காவலில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை" என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.

இலண்டன் விமானநிலையத்தில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து டாக்டர் ஹனீஃபின் சிம் கார்ட் கண்டெடுக்கப்பட்டதையே அவர் மீதான குற்றச்சாட்டிற்கான முக்கிய காரணமாக ஆஸ்திரேலிய காவல்துறை கூறி வந்தது. அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலும் அவருக்கு எதிரான மிக முக்கிய ஆதாரமாக இதனையே ஆஸ்திரேலிய காவல்துறை ஆவணப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு தக்க வலுவான ஆதாரம் இல்லாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி, அவர் நீதிமன்றத்திலிருந்து வெளிவந்த மறுநிமிடமே மீண்டும் ஆஸ்திரேலிய காவல்துறை அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்ததற்கு இந்த சிம்கார்டு விவகாரமே காரணமாகக் கூறப்பட்டது.

ஆனால் இலண்டனில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஹனீஃபின் சிம் கார்டு கிடைக்கவில்லை எனவும், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள அவரின் மனைவியின் தம்பி வீட்டிலிருந்தே அவரின் சிம்கார்ட் மற்றும் ஸ்மார்ட் கார்ட் கிடைத்தன என்றும் காவல்துறை கூறியது. இதன் மூலம் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடுக்கிய காரணம் பொய்யானது என்பது தெளிவாகியுள்ளது.

எவ்வித உறுதியான ஆதாரமும் இன்றி அநீதியான முறையில் ஹனீஃப் நடத்தப்பட்டுள்ளதற்கு "பண்பாடு" மிக்க மேற்கத்திய நாடுகளின் உள்நோக்கம் தான் காரணம் ஆகும் (Haneef has been treated with gross prejudice and injustice by a purportedly "civilized" Western nation) என ஆஸ்திரேலிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஹனீபின் மீதுள்ள சந்தேகத்திற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கருதியது அவர் இலண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலுக்கு மறுநாள் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா செல்லவிருந்தது தான். அவர் ஆஸ்திரேலியாவில் வருமானம் போதாத சூழலிலும், தன் மனைவியின் பிரவசத்திற்கு அருகில் இருக்கவுமே இந்தியா செல்லவிருந்தார் என்ற தகவல்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரின் சந்தேகம் நீங்கி தெளிவு அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழன் இரவு தன் கணவருடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறிய டாக்டர் ஹனீபின் மனைவி புதிதாய் பிறந்த பெண் குழந்தை பற்றி விசாரித்ததாகவும், தான் குற்றமற்றவர் என்று உறுதிபடக் கூறியதாகவும் செய்தியாளர்களிடம் உருக்கமாகத் தெரிவித்தார்.

டாக்டர் ஹனீஃப் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அவரது ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான ஆவணங்களில் குளறுபடி செய்து அவரது குடியுரிமை விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்த தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் டாக்டர் ஹனீஃபை காவலில் அடைத்து விசாரணையைத் துவக்கிய நாள் முதல் ஆஸ்திரேலிய அரசு மீது உள்ள சந்தேகத்தை உலக ஊடகங்கள் எழுப்பி வந்திருந்தன. அது இப்போது சந்தேகமற நிரூபணம் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலிய சட்டக்குழுமமும் (Australian Law Council) மற்றும் சர்வதேச மனித உரிமை இயக்கமும் (Amnesty International) இணைந்து ஆஸ்திரேலியாவின் இந்த அநீதியான செயலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
தொடர்புடைய பிற சுட்டிகள்: தினத்தந்தி தாட்ஸ்தமிழ்.காம்

Tuesday, July 10, 2007

"உயிரை எடுப்போம்!" - துறவி உமாபாரதி கர்ஜனை!


சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து திருச்சியில் பாரதீய ஜனசக்தி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவி செல்வி உமாபாரதி (முன்னாள் பாஜக) "ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்" என்று கர்ஜித்தார். அவரது பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதாலோ என்னவோ திருச்சி போலீசார் அவர் மீது கலவரத்தை தூண்டுதல், கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்துறவியான உமாபாரதி, 'சேது சமுத்திர திட்டத்தினால் பாதிக்கப்படும் 10 லட்சம் பொது மக்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று அனைத்து மதத்தினரும் உள்ளார்கள். ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க அவர்கள் முன்வரவேண்டும். ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்று பேசினார். அவரது இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருப்பதால்தான் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துறவிகளெல்லாம் ஏன்தான் இப்படி 'உயிரை எடுக்குறாங்களோ', தெரியலை!